நீங்கள் நம்பிக்கையை எங்கே வைக்கிறீர்கள்?
- Published in Tamil Devotions
அநேகர் தேவன் மேல் தங்கள் நம்பிக்கையை வைக்கத் தயங்குகிறார்கள். ஆனால் நாசியில் சுவாசமுள்ள மனிதன் மேலும் உலகப் பொருட்கள் மேலும் தங்கள் நம்பிக்கையை வைக்கிறார்கள். கடைசியில் தான் தங்கள் முட்டாள்தனத்தை உணருகின்றனர். விசுவாசிகளாக நாம் தேவன் மீது நம் நம்பிக்கையை வைக்கவும், முழமையாக அவரை நம்பவும் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் சோதனைகளின் வழியாய்க் கடந்து செல்லும்போது, தானியேலின் நண்பர்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி நமக்குச் சரியான உதாரணமாக உள்ளது.
ராஜா நேபுகாத்நேச்சார் ஒரு பொற்சிலையை நிறுத்தி, எல்லா மக்களையும் அந்த சிலையை விழுந்து வணங்கும்படியாகக் கட்டளையிட்டார். ஆனால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ இந்த மூவரும் அந்த சிலையை வணங்க மறுத்தனர். அவர்கள் தேவன் தங்களைத் தப்புவிப்பார் என்று நம்பினர். ராஜா அவர்களைத் தன் முன் அழைத்து சிலையை வணங்கக் கட்டளையிட்டபோது, ‘சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.” (தானி 3:16-18). தேவன் அவர்கள் விசுவாசத்தையும் தன் மேல் இருந்த நம்பிக்கையையும் கனப்படுத்தி அவர்களை அந்த அக்கினிச்சூளையிலிருந்து பாதுகாத்தார். இன்றைக்கும் தேவன் உண்மையுள்ளவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கிறார். வேதாகமத்தில் மனிதன் மேலோ, உலகப்பொருள்கள் மேலோ நமது நம்பிக்கையை வைக்காமல் ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்க அழைக்கப்படுகிறோம்.
தேவனையும் அவர் வார்த்தையையும் நம்புதல்:
தேவனை நம்பு: ‘தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?” (சங் 56:4)
கர்த்தரை நம்பு: ‘கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.” (சங் 37:3,5).
தேவனுடைய நாமத்தை நம்பு: ‘அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பி யிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும்.”(சங் 33:21).
தேவனுடைய வார்த்தையை நம்பு: ‘உம்முடைய வசனத்தை நம்பியிருககிறேன்.” (சங் 119:42).
கிறிஸ்துவை நம்பு: ‘இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார். வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை. அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார். அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள் என்பதே.” (மத் 12:18-21).
மற்றவர்களை நம்புதல்:
ஆயுதங்களை நம்பாதே: ‘என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை.” (சங் 44:6).
செல்வத்தை நம்பாதே: ‘தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசவ ரியத்தினால் பெருமைபாராட்டுகிற, ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே.” (சங் 49:6-8).
செல்வாக்கு மிக்க தலைவர்களை நம்பாதே: ‘பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.” (சங் 146:3).
நண்பர்களை நம்பாதே: ‘சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்;” (மீகா 7:5).
மனிதனை நம்பாதே:’மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (எரே 17:5).
(Dr. C Barnabas, Translated from True Discipleship February 1997)